சென்னை வந்தடைந்தார் ராகுல் காந்தி... காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!!

By Narendran SFirst Published Sep 6, 2022, 9:50 PM IST
Highlights

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி, 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைய உள்ளார். கன்னியாகுமரியில் நாளை (07.09.2022) தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து மாலை 5.15 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார். இந்த நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

இன்று இரவு சென்னையில் தங்கும் அவர், நாளை நாளை காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பாரத பிரதமருமான ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு செல்கிறார். அங்கு அவர் மலர் அஞ்சலி செலுத்துகிறார். காலை 6.50 மணியளவில் நினைவிடத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். பின்னர் காலை 6.55 மணியளவில் நினைவிடத்தை ராகுல்காந்தி சுற்றி பார்க்கிறார். காலை 7 மணியளவில் ராஜீவ்காந்தியின் தியாக பூமியில் அஞ்சலி செலுத்துகிறார். காலை 7.05 மணியளவில் வீணை காயத்ரியின் இசையஞ்சலியில் பொதுமக்களுடன் ராகுல்காந்தி பங்கேற்கிறார். 8 மணியளவில் நினைவிடத்தில் அரச மரக்கன்றை ராகுல் நடுகிறார். தொடர்ந்து ராஜீவ்காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் அவருடன்  உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்கிறார். காலை 8.10 மணியளவில் நினைவிட நுழைவு வாயிலில் காங்கிரஸ் கொடியை ராகுல்காந்தி ஏற்றுகிறார்.

இதையும் படிங்க: அரசியலுக்கு வர வாய்ப்பு இருக்கு.? திருமாவளவன் மிக சிறந்த தலைவர்.. மாஸ் காட்டிய பா. ரஞ்சித் .

காலை 8.15 மணியளவில் காரில் அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார். காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரிக்கு செல்கிறார். அங்கிருந்து கன்னியாகுமரி படகு துறைக்கு காரில் செல்லும் அவர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். பின்னர் காமராஜர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் ராகுல்காந்தி அதன் பின்னர் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அங்கிருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைக்க உள்ளார்.  

click me!