பாட்டில் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்... உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Feb 26, 2022, 6:18 PM IST
Highlights

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தரமற்ற குடிநீர் அருந்துவதால் காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியின் போது தரத்தை ஆய்வு செய்த பின்புதான் கேன்களில் அடைத்து குடிநீரை விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களின் குறைபாடுகள் பற்றி 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் வரப்பெற்றுள்ளது.

மேலும் தரமற்ற குடிநீரை அருந்துவதால் காலரா, டைபாய்டு, அமீபியாசிஸ்,  வயிற்றுபோக்கு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் குறைவாக இருப்பின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யும் அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் மற்றும் Bureau of Indian Standards-ல் வழங்கப்படும் உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 20 லிட்டர் கேன்களில் லேபிள்கள் தெளிவாக ஒட்டப்பட்டிருக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் குடிநீர் நிரப்பும் முன்பு கேன்கள் நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட வேண்டும். கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியின் போது அதன் தரம் குறித்து ஆய்வு செய்த பின்பே நுகர்வோர் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்ய வேண்டும்.

உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் விதிகளின் படி  கேன்களின் மீதுள்ள லேபிள்களில் உணவு பாதுகாப்பு துறையின் உரிம எண்,  BIS - ஆல் வழங்கப்பட்ட உரிம எண், தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முழுமையான முகவரி, நிகர எடை, லாட் / கோடு / பேட்ஜ் எண், தயாரிப்பு தேதி, பயன்படுத்த கூடிய கால அளவு உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற வேண்டும்.  பொதுமக்கள் கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை கடைகளில் வாங்கும் பொழுது மேற்குறிப்பிட்ட விபரங்கள் உள்ளதா? என சரிபார்த்து வாங்க வேண்டும். கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களில் உள்ள  குறைபாடுகள் குறித்து 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உணவு பாதுகாப்புத் துறைக்கு  புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!