கரூர்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சரை சமூக வலைதளங்களில் “மீம்ஸ்“ போட்டு நக்கல் அடிப்பதாகவும், பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அதிமுகவினர் கரூர் காவலரிடம் புகார் அளித்தனர்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகவும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் வாட்ஸ்–அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரை பற்றி அவதூறு கருத்து பரப்பும் வகையில் “மீம்ஸ்“ உருவாக்கி மர்ம நபர்கள் சிலர் வெளியிட்டு உள்ளனர்.
இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையேயும், அமைச்சரின் ஆதரவாளர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சரின் ஆதரவாளர்களான கரூர் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த சிவசாமி (40) மற்றும் ரெட்டிபாளையத்தை சேர்ந்த பிரவீன்குமார் (30) ஆகியோர் தனிதனியாக கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில், "சமூக வலைதளங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. மீது பொய்யான, அவதூறான கருத்துகளை பரப்பி வரும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து கரூர் நகர காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் இந்த புகார்களின் அடிப்படையில் தனிதனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்.