தனியார் மருத்துவமனை செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை - எழும்பும் சந்தேகங்கள்; மருத்துவர் உள்பட மூவர் கைது...

First Published Mar 29, 2018, 8:59 AM IST
Highlights
Private hospital nurse hangs suicide - rising doubts Three arrested including the doctor


புதுக்கோட்டை
 
புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அங்கு பணியாற்றும் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையொட்டி சந்தேகத்தின்பேரில் மருத்துவர், மருத்துவமனை காவலாளி மற்றும் அவசர ஊர்தி ஓட்டுநர் ஆகிய மூவரை காவலாளர்கள் கைது செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள முத்துக்குடாவைச் சேர்ந்தவர் முத்துராஜா. இவரது மகள் தாயம்மாள் (22). இவர் மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல தாயம்மாள் மருத்துவமனைக்கு இரவு பணிக்கு வந்தார். வழக்கமாக பணி முடிந்து அவர் காலையில் ஊருக்கு சென்றுவிடுவார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் செவிலியர் தாயம்மாள் இருந்த அறை வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை காவலாளி மாரிமுத்து (48) நேற்று அதிகாலை அந்த அறையை திறந்து பார்த்தார். 

அந்த அறையில் செவிலியர் தாயம்மாள் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களிடம் கூறினார். 

இதையடுத்து மருத்துவர்கள் மணமேல்குடி காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மணமேல்குடி காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 

பின்னர் தாயம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தாயம்மாளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, தாயம்மாளின் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மணமேல்குடி காவலாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தாயம்மாளின் மரணம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவலாளர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து மணமேல்குடி காவலாளர்கள் வழக்குப்பதிந்து, சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் முத்து (65), மருத்துவமனை காவலாளி மாரிமுத்து, மருத்துவமனை அவசர ஊர்தி ஓட்டுநர் மணிகண்டன் (24) ஆகிய மூவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். 

செவிலியர் தாயம்மாளின் மரணம் குறித்து காவலாளர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!