
சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அரையாண்டு முன் தேர்வு ரத்து செய்யப்படுவதாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பள்ளிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது. இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மழை நீர் பாதிப்பு காரணமாக விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளி நிர்வாகமே
முடிவெடுக்கலாம் என்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த அரையாண்டு முன் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துவகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும், பாடங்களை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாலும் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க அரையாண்டு முன் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட
பள்ளிகளில் முன் அரையாண்டு தேர்வு நவம்பர் 6 ஆம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த நிலையில் அரையாண்டு முன் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.