மண்பானையில் இனி பொங்கல் படைப்பதில் சிக்கல்…!

By vinoth kumarFirst Published Dec 26, 2018, 5:40 PM IST
Highlights

பொங்கல் பண்டிகையன்று, பெரும்பாலான மக்கள் மண் பானைகளுக்கு பதில் எவர்சில்வர் பாத்திரங்களை வைத்து பொங்கல் வைப்பதால், மண் பானை தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையன்று, பெரும்பாலான மக்கள் மண் பானைகளுக்கு பதில் எவர்சில்வர் பாத்திரங்களை வைத்து பொங்கல் வைப்பதால், மண் பானை தயாரிக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது.

தமிழர்களின் முதன்மையான பண்டிகையாக விளங்கும் பொங்கல் பண்டிகையில், விவசாயத்துக்கு உதவும் மண்ணுக்கும், மாட்டுக்கும், சூரியனுக்கும் மரியாதை செலுத்துவது தமிழரின் பண்பாடு. காலப்போக்கில், பெரும்பாலான விளை நிலங்களில் கான்கிரீட் கட்டிடங்கள் முளைக்கத் துவங்கின. மண் பானையில் பொங்கல் வைத்த தமிழ் மக்கள், குக்கரில் வைத்த பொங்கலை பார்த்து, 'பொங்கலோ பொங்கல்' என்று கூவி மகிழ்கின்றனர்.

 

பொங்கல் வைக்கும் பானையை மாற்றிய மக்களால், பரம்பரை பரம்பரையாக மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மண்பாண்டத் தொழிலாளர்கள் வேறு தொழிலுக்கு தாவி வருகின்றனர். இதுகுறித்து, திருப்பாச்சூர் கிராமத்தை சேர்ந்த குயவர் ஒருவர் கூறுகையில், வயலில் முன் போல மண் எடுக்க முடியவில்லை. கிராமப்புறங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மண் பானைக்கு பதில் எவர்சில்வர் பானைகளை வைத்து பொங்கல் வைக்கின்றனர்.

 

ஒரு காலத்தில் வண்டி, வண்டியாக பொங்கல் பானை, மண் சட்டி செய்வோம். தற்போது 100 பொங்கல் பானை மட்டுமே செய்துள்ளோம். சக்கரத்தில் இருந்து எடுத்து பானையை நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். ஒருநாள் மழை பெய்தால் கூட எங்களுக்கு ஒரு வாரம் வீணாகி விடும். நிரந்தர வருமானம் இல்லாத தொழிலை கட்டிக் கொண்டு எத்தனை நாள் தான் உயிர் வாழ்வது. எங்களுக்கென்று நிரந்தர வருமானம் ஏற்படுத்த, அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், எங்களது வாரிசுகளுக்கு மண்பாண்டம் செய்யும் தொழிலை நாங்கள் கற்றுத் தரவில்லை. வேறு வேலைக்கு அனுப்பி விட்டோம். எங்களுக்கு பின்னர் இந்த தொழிலும் இருக்காது' என்றார்.  

click me!