
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமை தொடர்பான உட்கட்சி மோதலில், கட்சியை நிர்வகிக்கும் அதிகாரம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தரப்புக்கே உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) வியாழக்கிழமை அறிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் இருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த பாமகவின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அன்புமணி மோசடி செய்து கட்சியையே திருடிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
“2022-ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும். அதற்கான ஆவணத்தை அவரே தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் 2023-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் அன்புமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும், அவர் 2026 ஆம் ஆண்டு வரை தலைவராகத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.” என அவர் சுட்டிக்காட்டினார்.
“2023-ல் பொதுக்குழுக் கூட்டம் நடக்கவே இல்லை. அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணத்தை சமர்ப்பித்துள்ளது. போலியான பொதுக்குழு நடத்தியது கட்சியையே திருடியதற்கு ஒப்பானது” என்றும் ஜி.கே.மணி கூறினார்.
“அன்புமணி தலைவர் இல்லை என்று நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. மாறாக, அன்புமணி தரப்பு கொடுத்த போலியான ஆவணத்தின் அடிப்படையில் அவருக்கே அதிகாரம் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
“தேர்தல் ஆணையம் அன்புமணியுடன் சேர்ந்து அவருக்குச் சாதகமாக நடந்திருக்கிறது. இது மிகப் பெரிய மோசடி ஆகும். தேர்தல் ஆணையத்தில் எங்கோ முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிகிறது.” என்ற ஜி.கே. மணி, "தேர்தல் ஆணையம் செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை” என்றும் விமர்சித்தார்.
இந்த மோசடியைக் கண்டித்து, டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.