திருப்பூர்
நாளை மறுநாள் பா.ம.க. தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி திருப்பூரில் இரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று அக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற 11 -ந் தேதி திருப்பூரில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர் - அவினாசி சாலை பெரியார்காலனியில் உள்ள ஒரு உணவகத்தில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் தலைமை வகித்தார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அல்போன்சா பாலமுருகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் பிரதீப்குமார் வரவேற்றார்.
இந்தக் கூட்டத்தில் பா.ம.க. மாநிலப் பொருளாளர் திலகபாமா, மாநிலத் துணைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர்.
இந்தக் கூட்டத்தில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை மறுநாள் பா.ம.க. தலைமையில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி திருப்பூரில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும்,
ஜூலை மாதம் 19-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்கும் விவசாயிகள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது" போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் கோவை விசாலாட்சி, நாமக்கல் பொன்னுசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர்கள் ராஜேஷ், ராஜேந்திரன், மாநில அமைப்பு துணை தலைவர் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் அசோக் ராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் கிருத்திகா உள்பட பலர் பங்கேற்றனர்.