காவிரி முதல் ஸ்டெர்லைட் வரை தீர்வு கேட்டு சென்னையில் வருகிற 13-ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்; 

First Published Apr 9, 2018, 8:19 AM IST
Highlights
Farmers hunger strike on 13th on Chennai to solution for Cauvery to Sterlite


திருப்பூர்

காவிரி மேலாண்மை வாரியம் முதல் ஸ்டெர்லை ஆலை மூடுதல் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு சென்னையில் வருகிற 13-ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உழவர் உழைப்பாளர் கட்சியின் செயற்குழுக் கூட்டம் திருப்பூர் மாவட்டம், பல்லடம் கோடங்கிபாளையம் பிரிவு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் பாலசுப்பிரமணி, மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணி, திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈசுவரன் மற்றும் மாவட்ட, வட்டாரத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக விவசாயிகள் வங்கியில் வாங்கிய விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும், 

தமிழகத்தின் குடிநீர் ஆதாரமான காவிரி நதி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்காற்று குழுவையும் உடனே அமைக்க வேண்டும். 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்துவது, 

கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், விவசாய நிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கக் கூடாது, 

மீத்தேன் எரிவாயு, ஐட்ரோ கார்பன், நியூட்ரினோ ஆய்வு மையம் ஆகியவற்றை எதிர்ப்பது, 

விவசாய பயன்பாட்டிற்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 13-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் விடுதி அருகே நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

click me!