
பெட்ரோல் - டீசல் தினசரி விலை நிர்ணயம் செய்யும் முறையைக் கண்டித்து இம்மாதம் 13 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்பு, 6 மாதத்துக்கு ஒரு முறை பெட்ரோல் - டீசல் டீலர்களுக்கான கமிஷன் தொகையை மாற்றி அமைத்தல், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் - டீசல் விலை வரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13 ஆம்
தேதி அடையாள ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இம்மாதம் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் 54 ஆயிரம் பெட்ரோல் - டீசல் பங்குகள் மூடப்பட்டிருக்கும்.
இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த முரளி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், டீலர்கள் மீது பல்வேறு சுமைகள் சுமத்தப்பட்டு வருவதாகவும், எங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பெட்ரோல்
பங்குகளுக்கு வழங்கப்படும் மிஷின்களின் பொறுப்பு தங்கள் மீது சுமத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனைக் கண்டித்து வரும் 13 ஆம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறினார். மேலும், எங்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால், அக்டோபர் 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பெட்ரோல் பங்க் ஈடுபடும் என்றும் அவர்
எச்சரிக்கை விடுத்தார்.