விபத்தில் பழ வியாபாரியின் கால்கள் துண்டானதால், மக்கள் சாலைமறியல் போராட்டம்…

First Published Nov 29, 2016, 11:22 AM IST
Highlights


அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் பழ வியாபாரியின் கால்கள் துண்டானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெண்மங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி ரவி. இவர், திங்கள்கிழமை மாலை விளாங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ரவியின் கால்களில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களும் துண்டாகின.

இதை அறிந்த அப்பகுதி மக்கள், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருவதைக் கண்டித்தும், விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக காரில் வந்த அரசின் முதன்மைச் செயலர் பனீந்திரரெட்டி மற்றும் ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் ஆகியோர் சிக்கிக் கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்துக் கொண்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு கயார்லபாத் காவலாலர்கள் வந்தனர். பின்னர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர்.

பலத்த காயத்துடன் கிடந்த ரவியை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவாத்தையில் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக காவலாளர்கள் அளித்த உறுதியின்பேரில், அனைவரும் சாலை மறியலைக் கைவிட்டனர்.

மறியலால் திருச்சி - சிதம்பரம் சாலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

click me!