நாமக்கல்
குற்றவாளிகளை தேடிவந்த கர்நாடக போலீசாரை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து பொதுமக்கள் சிறைபிடித்ததால் நாமக்கல்லில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி வ.ஊ.சி. நகருக்கு நேற்று பிற்பகல் 3 மணியளவில் மூன்று பேர் கார் ஒன்றில் வந்தனர்.
இவர்கள் அந்தப்ப குதியில் உள்ள சில வீடுகளை எந்தவித அனுமதியும் வாங்காமலும், வீட்டின் உரிமையாளர்களிடம் தெரிவிக்காமலும் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
இதில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த மூன்று பேரையும் சிறைப் பிடித்ததால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது..
அதன்பின்னர் அவர்களிடம் அப்பகுதி மக்கள் விசாரனை நடத்தினர். அதில் அப்போது, “தாங்கள் கர்நாடக மாநில காவலாளர்கள் எனவும், பண மோசடி செய்த நபர்களை தேடி இங்கு வந்துள்ளோம்” என்றும் தெரிவித்தனர்..
இதுகுறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் காவலாளர்கள் அவர்கள் மூவரையும் மீட்டு காருடன் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அதன்பின்னர் அவர்களிடம் காவலாளர்கள் கேட்டபோது, “கர்நாடகாவில் நாமக்கல்லை சேர்ந்த சிலர் யாகம் வளர்ப்பதாக கூறி ரூ.5 இலட்சம் மோசடி செய்துவிட்டு தப்பிவிட்டனர் என்றும், அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்” என்றும் தெரியவந்தது.
மேலும், “இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக காவலாளர்கள் தேடும் நபர் ஒருவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் , அவர் நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரிய வந்ததாகவும், அதன் பேரிலேயே அந்த நபரை பிடிக்க இங்கு வந்தோம்” என்றும் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் புகுந்துவிட்டது என்று மக்கள் அனைவரும் பீதியில் இருக்கின்றனர். இந்த நிலையில் உள்ளூர் காவலாளர்கள் உதவியின்றி, கர்நாடக காவலாளர்கள் வந்ததை பார்த்ததும்,
குழந்தை கடத்தல் கும்பலோ என்று நினைத்து சிறைபிடித்துவிட்டோம்” என்று அப்பகுதி மக்கள் கூறினர்..