கஜாவை விட அழுத்தம் அதிகமான புயல்! பகீர் கிளப்பும் வானிலை ஆய்வு மையம்!

By manimegalai aFirst Published Dec 15, 2018, 3:07 PM IST
Highlights

வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெறுகிறது. இது தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 

வங்க கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது புயலாக வலுப்பெறுகிறது. இது தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆந்திரா மாநிலத்தை நோக்கி புயல் சென்றாலும், வட தமிழக கடலோர பகுதிகள் வழியாக கடப்பல், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் , நாளையும் கனமழை பெய்யும் என அதிகாரப்பூர்வமாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன், கூறியதாவது:-

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது, சென்னைக்கு தென்கிழக்கே 930 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,090 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைகிறது. இந்த புயல் ஆந்திர கடலோர பகுதிகளான ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே 17ம் தேதி  கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடதமிழக கடலோரங்களில் இருந்து 200 கிமீ தொலைவில் இந்த புயல் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் காற்றுடன் மழையும், ஓரிரு இடங்களில் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யும். குறிப்பாக, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

இந்தத 2 நாட்களில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தரைக்காற்றை பொறுத்தவரையில், மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வரை வீசக்கூடும்.

இந்த புயல், தற்போது வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதுவே மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் தமிழகத்தை நெருங்குவதற்கான வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் அது பெரிய மாற்றம். தற்போது உருவாகும் இந்த புயல், ‘கஜா’ புயலை விட சற்று அழுத்தம் அதிகமாக இருப்பதாக உள்ளது என்றார்.    

click me!