பாலமேடு ஜல்லிக்கட்டு.. 21 காளை அடக்கி வென்ற மதுரை வீரன்..3வது ஆண்டாக முதலிடம் பிடித்த பிரபாகரன்..

By Thanalakshmi VFirst Published Jan 15, 2022, 6:05 PM IST
Highlights

பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 3வது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 21 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற அவருக்கு பைக் வழங்கபட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 3வது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 21 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற அவருக்கு பைக் வழங்கபட்டது.மதுரை மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகள் அடக்கி பிராபாகரன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பாலமேடு ஜல்லிக்கட்டில் மூன்று ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலமேடு ஜல்லிகட்டு போட்டிகளும் அதிக காளைகளை பிடித்து இவர் முதல் பரிசை வென்றிருந்தார். 

மதுரை மாவட்டம் பொதும்பை பகுதியை சேர்ந்த பிரபாகரன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சிறந்த மாடுபிடி வீரர் முதல் பரிசை பெற்ற பிரபாகரனுக்கு பைக் வழங்கப்பட்டது. 11 காளைகளை பிடித்து இராண்டாம் இடம் பிடித்த கார்த்திக்ராஜாவிற்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த காளைக்கான முதல் பரிசு சிவகங்கை புலியூரை சேர்ந்த சூளிவலி மாட்டின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது பரிசு காளையின் உரிமையாளர் பிரகாஷ்க்கு நாட்டு மாடு பரிசாக வழங்கப்பட்டது. இது தவிர கடிகாரம், வெள்ளிக்காசு, தங்கக்காசு, பீரோ, பைக் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களும் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. 

மேலும் பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசை பெற்ற மதுரையை சேர்ந்த பிரபாகரன், ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த ஜல்லிக்கட்டில் இரு காவலர்கள் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் களமிறக்கப்பட்டன. 

மேலும் மதுரை எஸ்.பி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கொரொனா பாதிப்பின் காரணமாக இரு டோஸ் தடுப்பூசி மற்றும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ள உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். போட்டியின் போது காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு தயார் நிலையில் இருந்தது.

click me!