
குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளுக்கு, வழங்கப்பட்டுள்ள கணினி முறை செயலி இயந்திரத்தில் "சிக்னல்' கிடைக்காததால் தெருத் தெருவாக சென்று ரேசன்கடை அதிகாரிகள் சிக்னல் தேடுகின்றனர்.
தற்போது உள்ள குடும்ப அட்டை வரும் டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிறது. எனவே, புதிய "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணிகளில் மாவட்ட வழங்கல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரேசன் கடைகளுக்கு கணினி முறை செயலி இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது.
இப்பணி முடிவடைந்ததும் அனைவருக்கும் "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். இந்நிலையில் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டுள்ள கணினி முறை செயலி இயந்திரங்களில் "சிக்னல்' பிரச்னை உள்ளது. இதில், திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று. திருவள்ளூர் நகரத்திற்கே "சிக்னல்' பிரச்சனை என்றால், கிராமப்புறங்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது.
இதனால், ரேசன் கடை ஊழியர்கள் கணனி முறை செயலி இயந்திரத்தை தெருத் தெருவாக எடுத்துச்சென்று, "சிக்னல்' கிடைக்கும் இடங்களில் அமர்ந்து, ஆதார் அட்டை எண்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
பதிவு செய்யவே இந்த நிலை என்றால், வருங்காலத்தில் பொருள்கள் வாங்க மக்கள் கூட்டமாக வரும்போது, "சிக்னல்' கிடைக்கவில்லை என்றால் ரேசன் கடை பணிகள் பெருமளவில் பாதிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எனவே, கணினி முறை செயலி இயந்திரத்துக்கு "சிக்னல்' பிரச்சனை தீர சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.