
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணிக்கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு ஊழியர்கள் கண்களில் கருப்பு துணிக்கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் புகழேந்தி, தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் அந்துவன்சேரல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சங்கத்தை சேர்ந்த ராணி, இளவரசன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்பட சத்துணவு ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும்.
ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு பணிக் கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 இலட்சமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 இலட்சமும் வழங்க வேண்டும்.
பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தி அரசாணை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.