20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!

First Published Dec 14, 2017, 2:35 PM IST
Highlights
Northern state burglars arrested near namakkal


கோவையில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடித்த வழக்கு தொடர்பாக, வட மாநில கொள்ளையர்களை போலீசார் சுமார் 20 கிலோ மீட்டர் , தூரம் துரத்திச் சென்று பிடித்து கைது செய்தனர்.

கோவை  விளாங்குறிச்சியில் உள்ள இரண்டு ஏடிஎம் மையங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் நாமக்கல் வழியாக வட மாநிலங்களுக்கு தப்பி செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சுங்கச்சாடியில், கோவை மற்றும் நாமக்கல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை 5 மணியளவில் அரியானா பதிவெண் கொண்ட கார் ஒன்றை மறித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில், காரில் இருந்தவர்கள் கொள்ளையர்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வெளி மாநில பதிவெண் கொண்ட கொண்ட கார் நிற்காமல் சென்றது.

இதனையடுத்து அந்த காரை துரத்தி சென்ற போலீஸ்  சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்றனர். சினிமா காட்சியைப் போல் கொள்ளையர்களை போலீசார் துரத்திச் சென்றனர்.

அப்போது கொள்ளையர்கள்  பொம்மைக்குட்டை மேடு என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றனர். அவர்களை விடாமல் துரத்தி சென்ற போலீசார், கொள்ளையர்களில் ஒருவன் வீட்டு மாடி ஒன்றில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். பொது மக்கள் உதவியுடன் அவனை பிடித்தனர்.

மேலும் 2 பேர் அங்கிருந்த சோளக்காட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு ஹெலிகேம் கொண்டு வரப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடந்தது. அதில், சோளக்காட்டில் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். 

நேற்றுதான் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போத திரைப்படங்களில் வருவதைப்போன்று செயல்பட்டு  வட மாநில கொள்ளையர்களை போலீசார் துரத்திப்பிடித்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

click me!