
திருப்பூர்
திருப்பூரில் இரண்டு மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகம் செய்யப்படாததால் சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை வெற்றுக் குடங்களுடன் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவன்மலை அடிவாரப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரும் சிரமம் அடைகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து மக்கள் முறையிட்டனர். நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி அனுப்பியதோடு சரி எந்த ஒரு தீர்வும் தரப்படவில்லை.
பொறுமை இழந்ததாலும், தண்ணீர் தங்களின் அடிப்படைத் தேவை என்பதாலும் சிவன்மலை ஊராட்சியில் உள்ள மலையடிவாரத்தில் வசிக்கும் நான்கு வீதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் சரவணா நகர், சாலைக்கடை, எருக்கலங்காட்டுப்புதூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று ஒன்றாக திரண்டனர்.
அவர்கள், குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
“சிவன்மலை அடிவாரப்பகுதியில் இருந்து மின் மோட்டார் இயக்கி ஊராட்சியில் உள்ள மற்றப் பகுதிகளுக்கு ஊராட்சி மூலம் குடிநீர் கொண்டு செல்கின்றனர்.
ஆனால், மலை அடிவாரப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கு குடிநீர் கொடுப்பதில்லை.
மேலும், இங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் பழுதாகியுள்ளது இதை பழுது நீக்கி இயக்கினால் கூட ஓரளவுக்கு குடிநீர் கிடைக்கும் அதையும் ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை” என அம்மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தும் தொடர்புடைய அதிகாரிகள் வராததால், ஊராட்சிச் செயலாளர் காஞ்சனாவிடம் இது தொடர்பாக அவர்கள் மனு கொடுத்தனர்.
அதில், குடிநீர் பிரச்சனையை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் சாலை மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.