Omicron : “ஒமைக்ரான் அச்சம் தேவையில்லை.. தமிழக அரசு தயாராக இருக்கிறது.. “ அமைச்சர் மா.சுப்ரமணியன் புதிய தகவல்

By Raghupati RFirst Published Dec 3, 2021, 7:28 AM IST
Highlights

ஒமைக்ரான் வைரஸ் குறித்த அச்சம் தேவையில்லை என்றும், தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

கோவை விமான நிலையத்தில் பேசிய அவர், ‘ஒமைக்ரான் வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் தோன்றி மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. கரோனா வைரஸை தொடர்ந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், காமா என பலவகையான வைரஸ்கள் உருமாற்றங்கள் அடைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. 30 மேற்பட்ட நாடுகளில் 300க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

எனவே தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களையும் கண்காணிக்க உத்தரவிட்டார்கள். தமிழக முதல்வரின் உத்தரவின்படி இன்று காலை மதுரை திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடாந்து கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஆய்வு செய்யப்பட்டது. மாஸ்க் ஃபீவர் ஸ்க்ரீனிங் சிஸ்டம் மூலம் விமான பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளான ஹாங்காங், தென்ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முழுமையாக பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவு வரும்வரை அவர்கள் விமான நிலையத்தில் தங்கவைக்கப்படுவார்கள். 

யாருக்காவது தொற்று உறுதி செய்யப்பட்டால் விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்தாலும் அவர்கள் ஒருவாரம் வீட்டு காவலில் வைக்கப்படுவார்கள். அவர்களை வருவாய்த்துறை உள்ளாட்சித்துறை சுகாதாரத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவர்களுக்கு பரிசோதனையை இலவசமாக செய்யவும் தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து திரும்புவர்களில் பரிசோதனையை செய்ய முடியாத பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கும் பரிசோதனையை இலவசமாக செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள்.

கடந்த நான்கு நாட்களாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் எடுக்கப்பட்ட 1807 மாதிரிகள் எடுக்கப்பட்டதில் அனைத்தும் முடிவுகளும் நெகட்டிவ் என வந்துள்ளது. தற்போது வரை தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று காணப்படவில்லை. கரோனா வைரஸின் புதிய வகை உருமாற்றத்தை கண்டறியும் வகையில் ரூ.4 கோடி மதிப்பில் மரபணு சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா உள்ளிட்ட பல்வேறு உருமாறிய வைரஸ் தொற்றுகள் வந்தபோதிலும் தற்போது கரோனா தொற்று வைரஸ் தினசரி தொற்று பாதிப்பு 705 ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் தொற்று தொடர்பாக பல்வேறு கட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதற்கு தேவையான மருத்துவக் கட்டமைப்பு தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான முறையில் உள்ளது. முன்பு இருந்ததைவிட மூன்று மடங்காக படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் வசதிகள் மருத்துவ வசதிகள் உள்ளன. தற்போது ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய 3.2 லட்சம் பரிசோதனை கிட்டுகள் உள்ளன. இன்னும் 1 இலட்சம் பரிசோதனை கிட்டுகள் கோரப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஒன்றிய அரசு ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படிஅனைத்து நடவடிக்கைகளை மிகச் சிறப்பாக செய்து வருகிறோம்.

மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல் உரிய சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடும் பணியை தமிழகம் இயக்கமாக நடத்தி வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி சிறப்பு முகாம் மற்றும் பழங்குடியினர் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி போடப்பட்டது. வாரந்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தபட்டு வருகிறது. இவ்வாறு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

முதல் தவணை தடுப்பூசி 78 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி 44 சதவீதத்திற்கு மேல் போடப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது தவணை போட காத்திருப்பவர்கள் 88 இலட்சம். நம்மிடம் 1.13 கோடி தடுப்பூசிகள் கை இருப்பில் உள்ளது. நாளை தமிழ்நாட்டில் 50000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1200 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு தொற்றிலிருந்து 97.5 சதவீதம் உயிர் பாதுகாப்பு இருப்பதாக தெரியவருகிறது. எனவே,  தடுப்பூசியை அனைவரும் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரிசோதனை கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு செய்யப்படுகிறது.

இதுவரை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 617 நபர்களுக்கு டெங்குகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நலமாக உள்ளனர். மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். பொதுமக்கள் ஒமைக்ரான் வைரஸ் போன்ற எந்த வைரஸாக இருந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு தங்களை தற்காத்து கொள்வதற்கு கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் தடுப்பூசிகளை தயக்கமின்றி போட்டுக்கொள்ளவேண்டும். அத்துடன் இந்த தொற்று தொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்படதேவை இல்லை’ என்று கூறினார்.

click me!