காஞ்சிபுரம், தொண்டைமண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்தின் மடாதிபதி பெங்களூரு சென்ற குறித்து நித்யானந்தாவின் சீடர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், பரமசிவன் கோயில் தெருவில் தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசர் மடம் உள்ளது. இந்த மடத்தின் 232-வது பட்டமாக திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் இருந்து வருகிறார். தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியார் பொறுப்பேற்று 18 ஆண்டுகள் ஆகிறது.
தொண்டை மண்டல ஆதினத்துக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கும்மேல் சொத்துக்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் மிகவும் பழமையான விலை மதிக்க முடியாத மரகத லிங்கமும், பாண லிங்கமும் இந்த மடத்தில் உள்ளன. தொண்டை மண்டல ஆதீன மடத்தைச் சேர்ந்த நிர்வாகிகளே இந்த சொத்துக்களை கவனித்தும் பராமரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், ஆதீனத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்குடன், நித்தியானந்தாவின் சீடர்கள், ஆதீன மடத்தில் தங்கியிருப்பதாக புகார் எழுந்தது.
அது மட்டுமல்லாமல், மடத்தில் சிவலிங்க பூஜையை மாற்றி, நித்யானந்தா பூஜை செய்து வருவதாகவும், மடத்துக்கு வரும் பக்தர்களுக்கு நித்யானந்தாவின் சீடர்கள் ஆசி வழங்குவதாகவும், மடத்தின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும், அவர்கள் கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பேசுவதற்கு, மடாதிபதி ஞாயிற்றுக்கிழமை மாலை வர கூறியிருந்தார். ஆனால், தொண்டை மண்டல முதலியார்கள் சங்க குழு மடத்துக்கு சென்றபோது, மடம் பூட்டப்பட்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த தொண்டை மண்டல முதலியார்கள் அமைப்பினர், மடாதிபதி ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நித்யானந்தாவின் சீடர்கள் கடத்தி இருக்கலாம் என்றும், அவரை நித்யானந்தாவின் சீடர்கள் பிடியில் இருந்து மீட்க வேண்டும் என்றும், அவரை கண்டுபிடித்து தரக்கோரி, பெரிய காஞ்சீபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை கொண்ட தொண்டை மண்டல ஆதீனம் ஞானப்பிரகாசர் பெங்களூருவில் இருப்பதாக தெரியவந்தது.
திருவம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரியாரை, போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ஆதீன பரமாச்சாரியார், தான் பெங்களூருவில் ஒரு பூஜைக்காக வந்திருப்பதாகவும், 3 நாட்கள் கழித்து காஞ்சிபுரம் வருவதாகவும், வந்தவுடன் தகவல் அளிக்கிறேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார்.