பழங்குடி மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடுகள் செய்த நீலகிரி காவல்துறை…

First Published Oct 17, 2017, 7:08 AM IST
Highlights
Nilgiris police arranged for the celebration of the Diwali festival of the ...


நீலகிரி

பழங்குடி மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நீலகிரி காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி காட்டுப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட நீலகிரி காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நீலகிரி மாவட்ட எஸ்.பி.முரளிரம்பா உத்தரவின்பேரில் ஓவேலி பேரூராட்சியில் உள்ள நியூஹோப் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட எல்லமலை குறும்பர்பாடி பழங்குடி கிராமத்தைச் சுற்றியுள்ள முள்புதர்களை காவல்துறையினர் அகற்றினர். கிராமத்திற்குச் செல்லும் சாலையையும் சீரமைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நிறைவாக அந்த காட்டுப் பகுதியில் உள்ள சுமார் 200 பழங்குடி குடும்பத்தினருக்கு தீபாவளி கொண்டாட புத்தாடைகள், உணவு, பாத்திரங்கள், கம்பளி உள்ளிட்டவற்றை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு, கூடலூர் டி.எஸ்.பி. ரவிசங்கர் தலைமை வகித்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடலூர் காவல் ஆய்வாளர் சக்திவேல், மாவட்ட காவல்துறை நிர்வாகம் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள், லாரன்ஸ், உதவி ஆய்வாளர் ராஜாமணி, மோகன் தாஸ் உள்ளிட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

click me!