இப்படி அடிச்சு ஊத்தி இதுவரை பார்த்ததில்லை… ஒரே நாளில் 82 செ.மீ மழை ! இன்னைக்கு 100 செ.மீ. மழைக்கு வாய்ப்பு !! அச்சத்தில் அவலாஞ்சி மக்கள் !!

By Selvanayagam PFirst Published Aug 8, 2019, 7:22 PM IST
Highlights

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 82 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்று 100 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அவலாஞ்சி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முழுவதும் தென்மேற்கு பருவமழை 6-வது நாளாக இன்றும் தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சத மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்மழையால் ஊட்டி- மஞ்சூர் சாலையில், குந்தா பாலத்தில் இன்று காலை கற்பூர மரம் விழுந்தது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பர் பவானி, அவலாஞ்சி, கிண்ணக்கொரை, தங்காடு, இத்தலார், பைக்காரா உள்ளிட்ட சாலைகளிலும் மரங்கள் விழுந்துள்ளன.

ஊட்டி - கூடலூர் சாலையில், பைக்காரா அருகே, சாலையில் விரிசல் ஏற்பட்டு, மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு வீரர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். கூடலூர் புத்தூர்வயல் அருகே, தேன்வயல் ஆதிவாசி கிராமம் அமைந்துள்ளது. இங்கு தற்போது, சுமார் 17 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வெள்ளம் புகுந்தது.

மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்கள் தண்ணீரில் மிதக்கிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அவலாஞ்சியில் 82 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. மற்ற இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. அதற்கு அடுத்தபடியாக உதகையில் 37 செ.மீ. , கூடலூர் 24 செ.மீ. மழை வெளுத்து வாங்கியது.

இதே போல் பவானி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதே நேரத்தில் இன்று அவலாஞ்சி பகுதியில் 100 செ.மீ.அளவுக்கு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

click me!