புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கெடுபிடி...! கண்காணிப்பு வளையத்திற்குள் நட்சத்திர ஓட்டல்கள்!!

By vinoth kumarFirst Published Dec 27, 2018, 4:26 PM IST
Highlights

சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது.

சென்னை மாநகர கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்கள், கிளப் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கிளப், உணவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்,  பொழுது போக்கு இடங்களில், புத்தாண்டு தினத்தை கொண்டாட அனுமதி கோரி விண்ணப்பிப்போருக்கு, 31.12.2018 அன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை சிறப்பு உரிமம் வழங்கப்படும்.

நட்சத்திர ஓட்டல் உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்ய வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வளாகத்திற்குள் வரும் வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

 

அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களை தவிர மற்ற இடங்களில் மது வகைகளை பரிமாற கூடாது. நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அருகிலோ தற்காலிக மேடைகள் அமைத்தல் கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக, தற்காலிக மேடைகள் அமைக்கப்படும் பட்சத்தில், மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

நீச்சல் குளங்களை 31.12.2018 அன்று மாலை 6 மணிமுதல் 1.1.2019 அன்று காலை 6 மணிவரை மூடி வைக்க வேண்டும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வெளிநாட்டவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் சரிபார்க்க வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகள் நடக்கும் அறையில் ஈவ்டீசிங் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓட்டல் நிர்வாகத்தினர் போதிய பணியாளர்களை நியமித்து கண்காணிக்க வேண்டும். நீச்சல் குளத்திற்கு செல்லும் வழிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும் கூடுதலான விருந்தினர்களை நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்க கூடாது. 

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். மது அருந்தி வெளியே வரும் விருந்தினர்களை, மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க, நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குடிபோதையில் அத்துமீறல் செயல்களில் ஈடுபடுபவர்களை விடுதி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்துதல் வேண்டும். நிர்வாகத்தினர், கேளிக்கை நிகழ்ச்சிகள் மிகுந்த நாகரித்துடனும், கண்ணியத்துடனும் நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

click me!