
விருதுநகர்
புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் பத்து நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அருப்புக்கோட்டை மக்களுக்கு, சாத்தூர் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் மக்களுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை நகராட்சி மூலம் சுழற்சி முறையில் விநியோகம் செய்து வருகின்றனர்.
வைகை அணையில் இருந்து வரும் குடிநீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், தாமிரபரணி கூட்டு குடிநீர் மூலம் கிடைக்கப் பெறும் குடிநீரையே இருபது நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விநியோகம் செய்கின்றனர்.
மக்களும் வரும் நீரைப் பிடித்து தேக்கி வைக்க ஆரம்பித்ததால் தண்ணீரில் கொசுப் புழு உருவாகும் நிலை ஏற்பட்டது. டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில் நகராட்சி சுகாதார அதிகாரிகளும் வீடு, வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வந்தனர்.
எனவே, குறைந்த பட்சம் வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பத்து நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும் வகையில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளுடன் சாத்தூர் எம்.எல்.ஏ. ராமச்சந்தரன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் கூறியது:
"தற்போது அருப்புக்கோட்டை நகருக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் 40 இலட்சம் லிட்டர் தண்ணீர் குறைவில்லாமல் கிடைக்கிறது. இதனை தேக்கி வைத்து விநியோகம் செய்ய நகராட்சியில் 34இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏழு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.
நகராட்சி நிர்வாகமும் தாமிரபரணி தண்ணீரை 20 நாட்களுக்கு ஒரு முறைதான் சுழற்சி முறையில் மக்களுக்கு விநியோகிக்கின்றனர். தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வரும் தண்ணீர் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நகருக்கு வந்தடைகிறது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் வீணாகிறது.
இதற்கு மாற்றாக, தாமிரபரணி தண்ணீரை பகல், இரவு நேரங்களில் சம பங்கு அளவில் கொடுப்பதற்கு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் பயன்பாட்டிற்கு வரும்போது 54 இலட்சம் லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதன் மூலம் மக்களுக்கு பத்து நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.
எனவே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அப்பணிகள் நிறைவு பெறும்" என்று சாத்தூர் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கூறினார்.