நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கே தேவையில்லாத ஒன்று என்றும், நீட் விவகாரத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்தான் பதவி விலக வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர், டிடிவி தினகரன், புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவு எம்எல்ஏக்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 21 எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் யாரும் அடைத்து வைக்கவில்லை என்றும், முதலமைச்சரை மாற்ற ஆளுநரை வலியுறுத்த புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளதாகவும் கூறினார்.
மருத்துவ படிப்பில் சேர இயலாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி மரணம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், நீட் தேர்வு என்பது தமிழகத்துக்கே தேவையில்லாத ஒன்று என்று கூறினார். நீட் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.