
கடலூர்
கடலூரில் கர்நாடகா அரசு பேருந்து உடைக்கப்பட்ட வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கடலூரில் கடந்த 10-ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கர்நாடகா அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.
இந்ப் போராட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் உள்பட ஏழு பேரை கடலூர் புதுநகர் காவலாளர்கள் கைது செய்தனர்.
இதில் கடல் தீபனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவலாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடல் தீபனின் பெற்றோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த நிலையில் அரசு மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த கடல் தீபனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு ஆட்சியர் தண்டபாணி உத்தரவிட்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொடுத்த பரிந்துரையை ஏற்று ஆட்சியர் தண்டபாணி இந்த உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் மூலம் கடல் தீபனிடம் புதுநகர் ஆய்வாளர் சரவணன் வழங்கினார்.