
விழுப்புரம்
விழுப்புரத்தில், கணவனை உருட்டுக் கட்டையால் தாக்கிவிட்டு அவரது மனைவியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (31). இவர் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைமணி (26). இவர்களுக்கு அஸ்வந்த் (3), பிரதீப் (1½) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு காற்றுக்காக பின்பக்க கதவை திறந்து வைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனை எப்படியோ அறிந்து கொண்ட மர்ம நபர்கள் மூவர் நேற்று அதிகாலை வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைந்தனர். பின்னர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த கலைமணியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
அப்போது, கண்விழித்து கொண்ட கலைமணி, தனது தங்கச் சங்கிலியை பறிக்க விடாமல் இறுக்க பிடித்துக் கொண்டார். பின்னர், திருடன்! திருடன்! என்று அலறினார். இந்த சத்தம் கேட்டு எழுந்த சுரேஷ், அந்த மர்ம நபர்களை பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர்கள் சுரேசை உருட்டுக் கட்டையால் அடித்தனர்.
பின்னர் கலைமணி கழுத்தில் கிடந்த 5 சவரன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த சுரேசை அவரது மனைவி கலைமணி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் பரணி, உதவி ஆய்வாளர்கள் பாலமுருகன், வெங்கட்ராமன் மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிந்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.