கந்துவட்டி கொடுமை; தீக்குளித்த தாயும், 2 குழந்தைகளும் உயிரிழந்த பரிதாபம்

First Published Oct 23, 2017, 5:32 PM IST
Highlights
Mother 2 children death


நெல்லையில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சுப்புலட்சுமி மற்றும் அவரின் 4 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரின் மற்றொரு பெண் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரின் மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இசக்கிமுத்து, தனது குடும்பத்துடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். 

கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்தார். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இசக்கி முத்து, கந்து வட்டிக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. பணத்தை திரும்ப தர வலியுறுத்தி கந்து வட்டிக்காரர்கள், தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்ததாகவும், கந்து வட்டிகாரர்களுக்கு ஆதரவாக போலீசர் டார்ச்சர் செய்து வருவதாகவும் புகார்
கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த இசக்கிமுத்து, மனைவி, குழந்தைகளுடன் தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றியதால் அலறிய அவர்கள் சிறிது நேரத்துக்குள் சுருண்டு விழுந்தனர். 

இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, 4 வயது குழந்தை மதி சாருண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தாயும், இரண்டாவது மகளும் உயிரிழந்த சிறிது நேரத்துக்கு பிறகு, மற்றொரு குழந்தை அட்சயாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இசக்கிமுத்துவுக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

click me!