
திருவாரூர்
தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குடவாசலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் சங்கத்தின் ஒன்றிய கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரமாதிருஞானம் தலைமை வகித்தார்.
ஒன்றியத் தலைவர் சிகாமணி, ஒன்றியப் பொருளாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் நிஜாம்மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், சங்கத்தின் மாநில இலக்கிய அணிச் செயலாளர் டேவிட் சத்தியநாதன் ஆகியோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், "அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குபவர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வை உடனே அமல்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயபால், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பக்கிரிசாமி, சங்கத்தின் மாவட்ட பொருளாளர் குமரவேலு,
கோட்டூர் ஒன்றிய செயலாளர் மணியன், பள்ளி கூட்டுனர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகவடிவேல், ஒன்றிய தலைவர் பிரேமா உள்பட பலர் பங்கேற்றனர்.