ஒரு சொட்டு தண்ணீர் இல்லை... கலங்கி தவிக்கும் 8 மாவட்ட விவசாயிகள்...!

By vinoth kumarFirst Published Dec 27, 2018, 5:38 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்தில் 1821 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. மேலும், 8 மாவட்டங்களில் ஒரு ஏரி கூட நிரம்பவில்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாக தமிழகத்தில் 1821 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. மேலும், 8 மாவட்டங்களில் ஒரு ஏரி கூட நிரம்பவில்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. இந்த பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. ஆனால், இந்த பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. 

குறிப்பாக, தமிழகத்தில் நவம்பர் முதல் வாரத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால், அதன்பிறகு ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. அதாவது, டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த பருவமழை முடிவடைய உள்ளது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் தமிழகத்தில் உள்ள 14,098 ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை என்று கூறப்படுகிறது. 

அரியலூர் மாவட்டத்தில் 95 ஏரிகளில் 7 ஏரிகள் மட்டுமே 100 சதவீதமும் நிரம்பியுள்ளது. இதே போன்று, சென்னையில் 2 ஏரிகளில் 1ம், கோவையில் 28ல் 3 ஏரிகளும், கடலூரில் 228ல் 23ம், திண்டுக்கல் மாவட்டத்தில் 190ல் 40ம், ஈரோட்டில் 22ல் 2ம், காஞ்சிபுரத்தில் 961ல் 83ம், கன்னியாகுமரியில் 2040ல் 407ம், கிருஷ்ணகிரியில் 87ல் 26ம், மதுரையில் 1339ல் 98ம், பெரம்பலூரில் 73ல் 1ம், புதுக்கோட்டையில் 1129ல் 8ம், சேலத்தில் 107ல் 1ம், தஞ்சாவூரில் 644ல் 205ம், தேனியில் 135ல் 27ம், தூத்துக்குடியில் 222ல் 23ம், திருச்சியில் 174ல் 15ம் நெல்லையில் 1327ல் 305ம், திருப்பூர் 39ல் 1ம், திருவள்ளூரில் 593ல் 1ம், திருவண்ணாமலை 697ல் 1ம், 519ல் 1ம், விழுப்புரத்தில் 842ல் 1ம், வேலூரில்519ல் 1 ஏரிகளும் நிரம்பியுள்ளது. அதே நேரத்தில் தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 1 ஏரிகள் கூட முழு கொள்ளவை எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 511 ஏரிகள், ராமநாதபுரத்தில் 318 ஏரிகள், திருச்சியில் 85 ஏரிகள், மதுரையில் 388 ஏரிகள் உட்பட மொத்தம் 1821 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் 14098 ஏரிகள் உள்ளது. இதில், 5751 ஏரிகளில் நீர் 1 முதல் 25 சதவீதம் வரை இருப்பு உள்ளது. 2115 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதம் வரையும், 51 முதல் 70 சதவீதம் வரை 819 ஏரிகளிலும், 71 முதல் 80 சதவீதம் வரை 968 ஏரிகளும், 81 முதல் 90 சதவீதம் வரை 733 ஏரிகளும், 91 முதல் 99 சதவீதம் வரை 584 ஏரிகளும், 100 சதவீதம் 1307 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளது. நீலகிரியில் ஒரு ஏரி கூட இல்லாததால், அந்த மாவட்டங்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை’ என்றனர்.

click me!