
தமிழக வரலாற்றில் மிக முக்கிய அடையாளமாகத் திகழும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த வரலாற்று ஆவணங்கள் அடங்கிய நூலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறையின் உதவி பதிப்பாசிரியர் அ.வெண்ணிலா தொகுத்த ‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ என்ற நூலை முதலமைச்சர் வெளியிட, அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார்.
இந்த நூல் 1927-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் விரிவான வரலாற்றை அரசு ஆவணங்களின் அடிப்படையில் விவரிக்கிறது.
1927-ல் சென்னை மாகாணப் பள்ளிகளில் இந்தி அறிமுகம் செய்யப்பட்டது முதல், அது கட்டாயமாக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்புகள் வரை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), தமிழ்ச் சங்கங்கள் மற்றும் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்த விவரங்கள்.
போராட்டத்தை ஒடுக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள், அரசின் ரகசிய ஆவணங்கள் மற்றும் அந்த ஆவணங்களை அழிக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் போன்ற அரிய தகவல்கள்.
சிறையிலேயே உயிர்நீத்த நடராஜன் - தாளமுத்து பற்றிய குறிப்புகள், போராட்டத்திற்காகத் தீக்குளித்தோர் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குறித்த ஊர் வாரியான தரவுகள்.
இந்தி எதிர்ப்பு தொடர்பாக அன்றைய சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையில் நடைபெற்ற காரசாரமான விவாதங்களின் தொகுப்பு.
தமிழ்நாடு தனது அடையாளத்தைத் தக்கவைக்க நடத்திய தனித்துவமானப் போராட்டத்தைப் பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆய்வாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக அமையும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.