
சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார். இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். மு.க.ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்துகொண்டு, இப்போது உங்களுக்கு இந்த சினிமா வசனம் எல்லாம் தேவையா?
ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்
ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ? என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலோ என்னவோ, கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது. 16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட, அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகரோ, கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார். இப்போது சொல்கிறேன்- ஆம். ரத்தக் கொதிப்பு தான். ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம். இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறதே... அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
இபிஎஸ்-க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: போரில் வாள் சுழற்ற முடியாத வீரன், வீட்டில் வில் வித்தை காட்டினானாம்! கரூர் விவகாரத்தில் சட்டமன்றத்தில் ஆணித்தரமாகப் பேச முடியாத எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வெளியே போய் பயில்வான் வேடம் போட்டிருக்கிறார். முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி என்ற பெயரில் முன்வைத்த வதந்திகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதிலளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொண்ட விதத்தைத் தோலுரித்துக் காட்டியதைக் கண்டும், பதில் பேசத் திராணியின்றிச் சட்டமன்றத்தை விட்டே ஓடிய பழனிசாமி, சமூக வலைத்தளத்தில் வந்து கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர்
கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளின் காலி இருக்கைகளைப் பார்த்துப் பேசிய வீராதி வீரன் யார்? அன்றைக்குக் காற்றோடு கத்திச் சண்டை போட்டவர், இன்று வெட்டி வசனம் பேசுகிறார். கூவத்தூரில் ஊர்ந்தெடுக்கப்பட்டு, டேபிளுக்கு அடியில் ஒளிந்து கிடந்த சூராதி சூரர், சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துவிட்டு வீரவசனம் பேசுகிறார். சிபிஐ-க்கு பயந்து, அமலாகத் துறைக்கு அஞ்சி, தேர்தல் ஆணையத்திற்கு நடுங்கி பிரதமர் மோடி பின்னாலும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பின்னாலும் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைக்கு வீரவசனம் எல்லாம் எதற்கு?
கருப்பு பட்டை பற்றி பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?
கருப்பு பட்டை அணிந்து வந்தது பற்றி சொல்லியிருக்கிறார் பழனிசாமி. வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் திமுக தீர்மானம் இயற்றியது. எங்கே தனது டெல்லி எசமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் சட்டசபையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வழங்கப்பட்ட கருப்பு பேட்ஜைக் கூட வாங்காமல் ஓடிய பயந்தான்கொள்ளிகள், கருப்பு பட்டை பற்றிப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா? பாஜகவின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோமோ.. அமலாகத்துறை வந்துவிடுமோ எனத் தினம் தினம் அஞ்சி, ரத்தக் கொதிப்பிலேயே வாழ்பவர்களா ரத்தத்தின் ரத்தங்களைக் காப்பாற்றப் போகிறார்கள்? அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பங்கேற்ற மகாமகத்தில் நெரிசலில் சிக்கி 48 பேர் துள்ளத் துடிக்க இறந்து போனார்கள். ’’மகாமத்திற்கு வந்து இறந்து போனதால் அவர்கள் உடனே மோட்சத்திற்குப் போவார்கள்’’ எனச் சொன்னவர்கள் எல்லாம், கரூர் நெரிசல் மரணத்திற்குப் பாடம் எடுப்பது வேடிக்கை.
கேடுகெட்ட அரசியல்வாதி
இறந்தோரை வைத்து அற்ப அரசியல் செய்கிறார் பழனிசாமி. 41 பேரின் இறப்பில் கூட்டணி அரசியல் செய்யும் கேடுகெட்ட அரசியல்வாதியைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. ஒன்றிய பாஜகவின் அடிமையான பழனிசாமி தனக்கொரு அடிமை சிக்க மாட்டாரா? எனத் தவம் கிடப்பது அவரது தவிப்பிலேயே தெரிகிறது. ஆனால், அதற்காக இறந்தோரை வைத்து அரசியல் செய்தால் அதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள். வெறும் வாட்ஸ்அப் வதந்திகளை மட்டும் நம்பி உயிர் வாழும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மை என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தகுதியில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உங்களின் மயான அரசியல் எடுபடாது என தெரிவித்துள்ளார்.