காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 22 கல்குவாரிகளில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
பருவமழை மற்றும் வறட்சி காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம் பகுதியில் உள்ள 22 கல்குவாரிகளில் தேங்கியிருந்த சுமார் 300 கோடி லிட்டர் நீரை, சென்னை மாநகர மக்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு குடிநீர் வாரியம் திட்டமிட்டது.
இதனைத்தொடர்ந்து குடிநீர்வடிகால் வாரியத்தினர் இத்திட்டத்தை 13 கோடியே 63 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொண்டனர்.
இதற்காக சிக்கராயபுரத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரி வரையிலான சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் மற்றும் குவாரிகளில் தேங்கியிருந்த நீரை மேல் ஏற்றும் ராட்சத மோட்டார்கள் பொருத்தும் பணிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. பின்னர் செம்பரம்பாக்கத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கல்குவாரி நீர் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நீர், சென்னை மாநகர மக்களின் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 3 கோடி லிட்டர் வீதம் 100 நாட்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.