
உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி டிஜிபிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். இவர் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும்பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தானாகவே நீதிபதி கர்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு ஆஜரானார்.
அப்போது, மே 5ஆம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி டிஜிபிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மனநல மருத்துவர்கள் நீதிபதிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.