இனி ஒரு ரூபாய்- க்கு வாங்க முடியாது ..! 14 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றப்பட்ட விலை..!

By Thanalakshmi VFirst Published Dec 1, 2021, 5:43 PM IST
Highlights

தமிழகத்தில் தீப்பெட்டி ஒன்றின் விலை 1 ரூபாயிலிருந்து 2 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களின் விலை உயர்வு உள்ளிட்ட விலையேற்றதால் தீப்பெட்டியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

வீட்டிற்கு தேவையான அவசியமான பொருள்களில் ஒன்று தீப்பெட்டி. நாம் சின்ன வயது முதல் ஒரு தீப்பெட்டியை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிருப்போம் .அதன் விலை  14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

தீப்பெட்டி தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தீப்பெட்டி தாயாரிப்பதற்கு தேவைப்படும் அதன் மூலப் பொருட்களின் விலை ,மின்சார கட்டணம் ,லாரி வாடகை உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளோரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்த பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ 410ல் இருந்து ரூபாய் 850ஆக உயர்ந்துள்ளது. இதே போன்று மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. குளோரைட் 70 ரூபாயில் இருந்து ரூ 82ம், அட்டை 42 ரூபாயில் இருந்து ரூபாய் 55 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எத்தனையோ பொருட்கள் விலை உயர்ந்தாலும் தீப்பெட்டி விலை உயர்த்தப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில் சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூபாய் 2க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் விற்பனை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

click me!