
திருமண நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை மண்டப உரிமையாளர்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனாவின் இரண்டாவது அலை குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவியது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து சில கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இருந்த போதிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,731 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 55 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் கொரோனா தினசரி பதிவானது ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் சென்னை மாநகராட்சியில் தொற்றை கட்டுப்படுத்த பல துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருமண நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மண்டப உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், திருமண மண்டபங்கள், கோவில்கள், ஹோட்டல்களில் நடைபெறும் திருமண நிகழ்வுகளையும் முன்னரே தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து தகவலை covid 19.chennai corporation.gov.in என்ற இணையதளத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முடிந்தால் இரட்டை முக கவசம் அணிந்து வெளியே செல்லலாம் என்று தெரிவித்துள்ளார்.