விபத்தில் நின்று போன இளைஞரின் இதயத் துடிப்பு… முதலுதவி செய்து உயிரை காப்பாற்றிய செவிலியர்!!

By Narendran SFirst Published Dec 4, 2021, 7:34 PM IST
Highlights

மன்னார்குடியில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு சி.பி.ஆர்  எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை செவிலியர் வனஜாவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடியில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு சி.பி.ஆர்  எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை செவிலியர் வனஜாவுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர் தோட்டத்தை சேர்ந்தவர் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே  வந்து கொண்டிருக்கும் போது அவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கீழே விழுந்த அந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.

அதை கண்ட செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து உடனடியாக  செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் முதலுதவியை செய்தார். இளைஞரின் மார்பின் மீது கை வைத்து அழுத்தி அவரது இதய துடிப்பை மீண்டும் கொண்ட வர முயன்றார். இதை அடுத்து மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பியதோடு நாடித் துடிப்பும் சீரானது. இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது.

இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இளைஞர் குறித்து விசாரனை செய்ததில் அவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த் என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். 

click me!