
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அரசு ஊழியர் உள்ளாடையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதனை ஏற்க மறுத்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு (45). அச்சரப்பாக்கம் உதவி கல்வி தொடக்க அலுவலகத்தில் இளைநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இருவரும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிற்றரசு ஆனந்தனின் நெற்றியில் கத்தியால் குத்திவிட்டாராம்.
இது குறித்து ஆனந்தன் மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். படுகாயம் அடைந்த ஆனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சூனாம்பேடு காவலாளர்கள் நேற்றுமுன்தினம் இரவு சிற்றரசை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இரவு 1 மணி அளவில் மதுராந்தகம் - செய்யூர் சூனாம்பேடு உள்ளிட்ட இடங்களில் பரவலாக சூறாவளியுடன் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
அப்போது சிற்றரசு தான் அணிந்திருந்த உள்ளாடையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். காவலாளர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள இல்லீடு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். இங்கு மின்சாரம் இல்லாததால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டாராம்.
சிற்றரசு இறந்த சம்பவம் அவரது உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து சூனாம்பேடு காலனி பஜார் வீதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் சந்தோஷ் ஹதிமானி உத்தரவின்பேரில் மதுராந்தகம் துணை காவல் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
சிற்றரசின் உடல் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையில் அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
"சிற்றரசின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இன்று (வியாழக்கிழமை) உடற்கூராய்வு நடத்தி சிற்றரசின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.