
தாம்பரத்தில் உள்ள ஏர்டெல் ஷோரூம் முன் அமர்ந்து ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாம் வாங்கிய இன்டர்நெட் இணைப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேகத்தை விட மிகக் குறைவான வேகமே கிடைப்பதாக அவர் புகார் தெரிவித்தார்.
கே.பி. சீனிவாசன் என்ற பெயருடைய அந்த நபர், தாம்பரத்தில் உள்ள ஏர்டெல் ஷோரூமின் நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. சீனிவாசன் கூறியதாவது:
"நான் ஏர்டெல் நிறுவனத்தில் மாதந்தோறும் ரூ.1,199 செலுத்தி டி.டி.ஹெச் (DTH) மற்றும் இன்டர்நெட் இணைப்பை ஜூலை மாதம் வாங்கினேன். இணைப்பை வாங்கும் போது, எனக்கு 100 Mbps வேகம் கிடைக்கும் என்று உறுதியளித்தார்கள். ஆனால், உண்மையில் எனக்கு அதிகபட்சமாக 40 Mbps வேகம் மட்டுமே கிடைக்கிறது."
"இதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தாலும், சரியான பதில் அளிப்பது இல்லை. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இதுகுறித்து விசாரித்து வருகிறேன். இதுவரை எனக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை."
மேலும் அவர் பேசுகையில், "நான் எனக்காக மட்டும் இங்கே வரவில்லை. என்னைப் போல ஏமாற்றப்படும் மொத்த மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் வந்திருக்கிறேன். ஒருவருக்கு மாதம் ரூ.400 வீதம் என்னைப் போல பலரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்."
"ஷோரூமில் கேட்டால், 'தொழில்நுட்ப வல்லுநர் வருவார், வருவார்' என்றுதான் சொல்கிறார்கள். ஏன் 100 Mbps வேகம் வரவில்லை என்று கேட்டால், 'அந்த டவரில் 40 Mbps வரைதான் உச்ச வரம்பு (Limit)' என்று சொல்கிறார்கள். இது ஒரு மறைமுகமான ஏமாற்று வேலை. எனக்கு இதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
வாக்குறுதி அளித்த இணைய வேகத்திற்கும், உண்மையில் கிடைக்கும் வேகத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்துப் புகார் தெரிவித்து, நபர் ஒருவர் ஷோரூம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.