மெரினாவில் கட்டுமானப் பணிகள் நடைபெறக் கூடாது! தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து

First Published Jun 18, 2018, 2:27 PM IST
Highlights
Madras High Court Chief Justice Indira Banerjee Comment


சென்னை மெரினா கடற்கரையில் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என்றும், தனிப்பட்ட முறையில் தான் உடன்படவில்லை என்றாலும் சட்டத்துக்குட்பட்டு மட்டுமே தீர்ப்பு கூறுகிறோம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பின் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. ரூ.50.08 கோடி செலவில் அவருக்கு அங்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் அன்பழகன் மற்றும் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது அப்போது பேசிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மெரினாவில் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என்பதே எனது தனிப்பட்ட கருத்து என்று கூறினார். தனிப்பட்ட முறையில்தாம் உடன்படவில்லை என்றாலும் சட்டத்துக்குட்பட்டு மட்டுமே தீர்ப்பு கூறுகிறோம் என்றார்.

தம்முடைய நீதித்துறை சார்ந்த பார்வையில் சட்டவிதிகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே தலையிட முடியும் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார். 

ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான வரைபடம் வரும் திங்கட்  கிழமை அன்று தாக்கல் செய்யப்படும் என்று தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே ஜெயலலிதா நினைவிடம் கட்டப்படுகிறது என்றும் அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை வருகின்ற 25 ஆம் தேதிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஒத்தி வைத்தார்.

click me!