
நாமக்கல்
நாமக்கல் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே வியூ பாயிண்டில் கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் உருண்டபோது சிதறி விழுந்த குழந்தைகள் உள்பட ஆறு பேர் காயங்களுடம் உயிர் தப்பினர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டி – நஞ்சுண்டாபுரத்தில் வசித்து வருபவர் மணி (34). இவர் நாமக்கல்லில் இருக்கும் பேட்டரிக் கடையில் வேலை செய்கிறார்.
நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக புனிதநீர் கொண்டு வருவதற்காக நேற்று முன்தினம் ஒரு காரில் தனது மகன், மகள் மற்றும் அண்ணன் மகள்கள் இருவர், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுமி ஆகிய ஐந்து பேருடன் ஒரு காரில் கொல்லிமலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு, அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து விளாரம் செல்லும் வழியில் உள்ள வியூ பாயிண்டை குழந்தைகளுக்கு காண்பித்துள்ளார்.
பின்னர், அங்குள்ள அட்டையாற்றில் புனிதநீர் கொண்டு வர காரை எடுத்தார் மணி. அப்போது சட்டென்று கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்தது.
இதில், அந்த கார் பலமுறை உருண்டதில், அதில் இருந்தவர்கள் காரில் இருந்து வெளியே ஆங்காங்கே சிதறி விழுந்தனர். அவர்களின் ஓலம் கேட்டு அந்த வழியாகச் சென்ற மக்கள் பள்ளத்திற்குள் இறங்கி ஆறு பேரையும் மீட்டனர்.
மேலே கொண்டு வரப்பட்டவர்களில் இரண்டு குழந்தைகள் பலத்த காயத்துடனும் மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பின்பு, அவர்கள் அனைவரும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
200 அடி பள்ளத்தில் விழுந்தும், ஆறு பேரும் காயங்களோடு உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் தீயாய் பரவியது. பின்னர், இதுகுறித்து வந்திநாடு காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.