நண்பனை மர்ம உறுப்பில் தாக்கி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி...

First Published Mar 6, 2018, 8:26 AM IST
Highlights
Life imprisonment for killing a friend by attacking in mystery part - Madurai High Court


மதுரை

சொத்துக்காக நண்பனை மர்ம உறுப்பில் தாக்கி கொன்றவருக்கு தேனி குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை மதுரை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த போஸ்ராஜ் என்பவர் தனது குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ரெங்கநாதன் வீட்டில் 25 வருடங்களாக தங்கியிருந்தார். 

தனது சொத்துக்களை தனக்கு பின்பு ரெங்கநாதன் அனுபவித்துக் கொள்ளலாம் என்று 2010-ஆம் ஆண்டில் உயில் எழுதி வைத்தார். இரண்டு வருடங்களுக்கு பின்பு அந்த உயிலில் மாற்றம் செய்ய விரும்புவதாக போஸ்ராஜ் ரெங்கநாதனிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் 30.7.2012 அன்று போஸ்ராஜ் இறந்துவிட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி தேவாரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், “போஸ்ராஜ் மர்ம உறுப்பில் தாக்கப்பட்டு இறந்ததாகவும், இதற்கு ரெங்கநாதன், அவரது மனைவி அழகம்மாள், போஸ்ராஜின் தம்பி அமிர்தராஜ் ஆகிய மூவர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கில் ரெங்கநாதன், அழகம்மாளுக்கு ஆயுள் தண்டனையும், அமிர்தராஜ்க்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தங்கள் மீதான தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் மூவரும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் விமலா, கிருஷ்ணவள்ளி ஆகியோர் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில், “மனுதாரர்களில் ரெங்கநாதன் மீதான தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்ற இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. இந்த வழக்கில் கொலையுண்ட போஸ்ராஜ் போன்ற மூத்த குடிமக்கள் ஏராளமானோர் உள்ளனர். 

அவர்களை போன்றவர்களை பாதுகாக்க பெற்றோர் மற்றும் முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதில் பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கலாம். 

இந்த சட்டம் குறித்து ஊடகங்களில் போதுமான விளம்பரம் செய்ய வேண்டும். இந்த சட்டத்தை பல்வேறு துறை அதிகாரிகளும் ஒன்றுபட்டு செயல்படுத்திட வேண்டும்” என்று அதில் கூறியுள்ளனர்.  

click me!