
விழுப்புரம்
ஸ்கேன் மற்றும் பரிசோதனைகள் செய்யும் நோயாளிகளுக்கு கட்டணத்துக்கான உரிய ரசீது வழங்கவில்லை என்றால் ஸ்கேன் பரிசோதனை மையங்களின் பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அல்ட்ரா சௌண்ட் ஸ்கேன் மையத்தினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அப்போது அவர், "பெண் கருக்கொலை மற்றும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின் கீழ் ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது அவரை சார்ந்த ஒருவர் உடனிருக்க வேண்டும்.
ஸ்கேன் மற்றும் அனைத்து பரிசோதனைகளுக்கும் பரிசோதனை மையங்களால் நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் தொகைக்கான உரிய ரசீது வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு ரசீது வழங்காதபட்சத்தில் மையங்களின் பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும். மேலும், பதிவு எண் இல்லாத இயந்திரங்கள் கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்.
நடைமுறைகளை பின்பற்றாத ஸ்கேன் மையங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பதிவுகள் ரத்து செய்யப்படும்" என்று அவர் எச்சரித்தார்.
இந்த்க கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் லலிதா உள்பட ஸ்கேன் மைய உரிமையாளர்கள், ஸ்கேன் பரிசோதனை மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.