நூல் விலை உயர்வுக்கு கண்டனம்... மே.16-21 வரை பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!!

Published : May 02, 2022, 09:56 PM IST
நூல் விலை உயர்வுக்கு கண்டனம்... மே.16-21 வரை பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்!!

சுருக்கம்

நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மே 16 முதல் 6 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மே 16 முதல் 6 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும், அனைத்து ரக நூல்களுக்கும் திங்கள்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டது பின்னலாடை உற்பத்தியாளர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு சார்பில் காங்கயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திருப்பூர் தொழில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.பி.முத்துரத்தினம் தலைமை வகித்தார்.

இதில், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த பருத்தி, பஞ்சு, நூலை அத்தியாவசியப்பட்டியலில் சேர்க்க வேண்டும், உள்நாட்டுத் தேவைக்குப் போக மீதமுள்ள பஞ்சு, நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் வரும் மே 16 ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரையில் 6 நாள்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் என மொத்தம் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில், நிட்மா தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகசாமி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், டீமா, சைமா, நிட்மா, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், பிரிண்டிங், எம்பிராய்டரிங், ஜாப் ஒர்க் சங்கங்கள் என 50க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதே போல, ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், ஐஎன்டியூசி உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு ரெடியா?.. 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. தேதி குறித்த அரசு!
பேச்சுவார்த்தையில் ஏமாற்றம்.. ஜன. 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி!