திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரி டி.எஸ்.பி. பாண்டியன் திடீரென இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், தமிழக அரசு அவரை பணிநீக்கம் செய்துள்ளது.
இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், திமுக ஆட்சியில் இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்த பாண்டியன், கணேசன், வினோதன் ஆகியோர், முகப்பேர் வீட்டு வசதி வாரியத்தில் தலா 2 கிரவுண்டு இடம் வாங்கினர்.
அதை வீட்டு வசதி வாரியத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பாக இவர்கள், அந்த இடத்தை தனியாருக்கு விற்றனர். ஒவ்வொரு அதிகாரியும் 19 லட்சம் வீதம் சட்ட விரோதமாக லாபம் அடைந்தனர். இதன் காரணமாக வீட்டு வசதி வாரியத்துக்கு இழப்பீடு ஏற்பட்டது.
கடந்த 2012 ஆம் வருடம் 3 ஆம் மாதம் ஒன்றாம் தேதி அன்று இவர்கள் மூன்று பேர் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையால் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மூன்று பேரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இப்போது டி.எஸ்.பி.யாக இருக்கும் பாண்டியன் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்றுதான் என்றும் அந்த அதிகாரி கூறினார்.