
சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த டி.எஸ்.பி. காதர் பாட்ஷாவை போலீசார் கும்பகோணத்தில் கைது செய்துள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரிடம் கோயில்களில் இருந்து திருடப்பட்ட 2 பஞ்சலோக சிலைகள் இருந்தன. வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு அவற்றை விற்க முயற்சித்தார்.
இதை அறிந்த 2 போலீசார் சிலைகளைக் கைப்பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த சிலைகளை, 15 லட்சம் ரூபாய்க்கு, கடத்தல்காரரிடமே போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா விற்றுவிட்டதாக புகார் எழுந்தது. மேலும், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து திருவள்ளூர் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாட்ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காதர் பாட்ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவானார். அவருக்கு உடந்தையாக இருந்த சிறப்பு எஸ்.ஐ. சுப்புராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த காதர் பாட்ஷாவை போலீசார் கைது செய்தனர். கும்பகோணத்தில், காதர் பாட்ஷாவை போலீசார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட காதர் பாட்ஷா, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.