மக்களவை தேர்தலில் களம் காணும் ஜான் பாண்டியன் மகள்? யாருடன் கூட்டணி?

By Manikanda PrabuFirst Published Feb 12, 2024, 1:18 PM IST
Highlights

மக்களவை தேர்தலில் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்

ஜான் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். பாஜக - அதிமுக கூட்டணி இருந்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனது ஆதரவை அவர் தெரிவித்து வந்தார். டெல்லியில் தமிழக கூட்டணி கட்சிகளுடன் பிரதமர் மோடி நடத்திய சந்திப்பின்போது, ஜான் பாண்டியன் உடனிருந்தார்.

இதனிடையே, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால், கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக அமித் ஷா அழைப்பு விடுத்தார். இருப்பினும், பாஜக  உடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் எந்த கூட்டணியில் இணைவது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

Latest Videos

மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்காத அக்கட்சி, யாருடன் கூட்டணி வைக்கலாம் என கேட்டு கட்சி நிர்வாகிகளிடம் வாக்கெடுப்பு நடத்தியது. வாக்கெடுப்பில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Rozgar Mela வேலைவாய்ப்புத் திருவிழா: 1 லட்சம் பணி நியமன கடிதங்களை வழங்கும் பிரதமர் மோடி!

இந்த சூழலில், மக்களவை தேர்தலில் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். மருத்துவராக பணியாற்றி வரும் அவர், அண்மைக்காலமாகவே அரசியல் நிகழ்வுகள், கட்சிக் கூட்டங்களில் தனது தந்தையுடன் காணப்படுகிறார். தனது தந்தையும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் முடிவு செய்து வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா தான் தனக்கு அரசியலில் ரோல் மாடல் என்றும் வினோலின் நிவேதா தெரிவித்துள்ளார். எனவே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஜான் பாண்டியனோ பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதியையாவது கேட்டு பெற்று விட வேண்டும் என முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. ஆனால், வெற்றி வாய்ப்பு கருதி அதிமுகவுடன் கூட்டணி  வைப்பது பற்றியும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

click me!