
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் வீடு புகுந்து பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற வழக்கில் ஆறு வருடங்களாக தலைமறைவாக இருந்த இருவரை காவலாளர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகரில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையைச் சேர்ந்தவர் ரேக்லாண்ட் ஜெபராஜ். இவருடைய மனைவி மேரி.
கடந்த 2011–ஆம் ஆண்டு மேரி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து மேரியை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 48 சவரன் நகைகள், கேமரா, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும், அவருடைய காரை எடுத்துச் சென்று பழனி அடிவாரம் பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து, கொடைக்கானல் காவலாளார்கள் வழக்குப்பதிந்து விசாரணையை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டடு பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
அப்போது, நீலகிரி மாவட்டம், குன்னூர் கம்பிசோலை பகுதியைச் சேர்ந்த லூர்காஸ் மகன் நம்பிக்கைராஜ் (28), ஊட்டியைச் சேர்ந்த விபின் (27) ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததை காவலாளர்கள் கண்டுபிடித்தனர்.
அவர்கள் இருவரும் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை காவலாளர்களுக்கு தகவல் கிடைத்ததையடுத்து கொடைக்கானல் துணை காவல் கண்காணிப்பாளார் செல்வம் உத்தரவின்பேரில் தனிப்படை காவலாளர்கள் ஊட்டிக்கு விரைந்தனர்.
பின்னர், அங்கு பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவலாளர்கள் தரப்பில் கூறியது:
"கொடைக்கானலில் பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்களது கூட்டாளிகளான ஊட்டியைச் சேர்ந்த சங்கர் (38), சந்தோஷ் (36), ஜெரால்டு ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்தத் தெரியவந்துள்ளது.
இதில் சங்கர், சந்தோஷ் ஆகியோர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.
மேலும், தலைமறைவாக உள்ள ஜெரால்டு என்பவரை தீவிரமாக தேடி வருகிறோம். நண்பர்களான இவர்கள் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 3½ சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவை குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தனர்.