போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்பட்ட ஜெ., எடப்பாடி பேனர்கள்; திருச்சியில் கெத்து காட்டிய டிராஃபிக் ராமசாமி...

By Suresh ArulmozhivarmanFirst Published Sep 1, 2018, 1:57 PM IST
Highlights

திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தமிழக முதலமைச்சரின் விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தி நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார் டிராஃபிக் ராமசாமி. அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து பதாகையை அகற்றியபிறகே போராட்டத்தைக் கைவிட்டார்.
 

திருச்சி

திருச்சியில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தமிழக முதலமைச்சரின் விளம்பர பதாகைகளை அகற்ற வலியுறுத்தி நடுரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார் டிராஃபிக் ராமசாமி. அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து பதாகையை அகற்றியபிறகே போராட்டத்தைக் கைவிட்டார்.

போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பரப் பதாகைகள் தமிழகத்தில் எங்கு வைக்கப்பட்டு இருந்தாலும் உடனே அவற்றைக் கிழித்தெறிவார் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. இவரை சென்னையில் அறியாதவரே இருக்க முடியாது.

இவர் நேற்று திருச்சிக்கு வந்திருந்தார். அங்கு திருச்சி மத்திய மண்டல காவல் ஐ.ஜி. வரதராஜைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், "போக்குவரத்திற்கு இடையூறாக அரசியல் கட்சியினர் பதாகைகளை வைத்துள்ளனர்.  அவற்றை அகற்ற காவலாளர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

அதற்கு ஐ.ஜி. வரதராஜன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னர் டிரஃபிக் ராமசாமி, திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு காரில் சென்றார். 

அங்கு காவல் ஆணையர் அமல்ராஜிடம், "திருச்சியின் பல இடங்களில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை அகற்ற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நானே அவற்றை அகற்றுவேன்” என்று கெத்தாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார். 

பின்னர் அங்கிருந்து டி.வி.எஸ். சுங்கச்சாவடி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அவர் வழியில் சுப்பிரமணியபுரம், சுந்தராஜ் நகரில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான குமார் அலுவலகம் எதிரே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தது. 

அந்த பதாகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் குமார் எம்.பி. ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

டிராஃபிக் ராமசாமி காரை நிறுத்திவிட்டு, "அந்தப் பதாகைகளை அகற்றும்வரை இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள் டிராஃபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தச் சமயத்தில் அங்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அந்தப் பதாகையை அகற்றினர். அரை மணிநேரம் நடந்த இந்தப் போராட்டத்திற்கு பிறகு டிராஃபிக் ராமசாமி அங்கிருந்து புறப்பட்டார். 

click me!