
தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என நடத்தப்பட்டு வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததையடுத்து மதுரை அவனியாபுரம்,பாலமேடு, அலங்காநல்லுர் என தொடங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் தகித்து பரவி வருகிறது.
முதன்முதலாய் இப்போராட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் மாணவர்கள்தான். அவர்கள் பற்ற வைத்த தீ மளமளவென தமிழகம் முழுவதும் பரவி வருகிறது.
குறிப்பாக அலங்காநல்லுர்,சென்னை மெரினா கடற்கரை, புதுச்சேரி கோவை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களும், மாணவர்களும் கொந்தளிப்பபுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நாமக்கல் அருகே மின் கம்பத்தில் ஏறிய மாணவர் ஒருவர் அதிலிருந்து குதித்து ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தினார்.படுகாயம் அடைந்த அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை எல்லீஸ்நகர் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறிய 6 மாணவர்கள் அங்கிருந்து குதிக்கப்போவதாக மிரட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரும் காவல் துறையினரும் அந்த மாணவர்களை செல்போன் டவரில் இருந்து இறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.